கோபீ சந்தனத்தில் திலகம் தரிப்பது எப்படி?

கோபீ சந்தனத்தில் திலகம் தரிப்பது எப்படி?

திலகம் தரிப்பதற்கு பல்வேறு விதமான பொருட்கள் சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கௌடீய வைஷ்ணவர்கள் கோபிசந்தனத்தைப் பயன்படுத்துவர். துவாரகையிலிருந்து பெறப்படும் இந்த மஞ்சள் நிற களிமண் அனைத்து இஸ்கான் கோயில்களிலும் கிடைக்கப்பெறும். திலகம் அணிவதற்கு சிறிது நீரை இடது உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளவும். கோபிசந்தனக் கட்டியை வலது கையில் எடுத்து, அதனை நீருடன் தேய்த்து, குழைவான பசையை உருவாக்கவும். 


வலது கையின் மோதிர விரல் நுனியைக் கொண்டு, இடது உள்ளங்கையில் இருக்கும் கோபிசந்தனக் கலவையில் சிறிதை எடுக்கவும். பின்னர், நெற்றியில் நாமம் இட வேண்டும். இரண்டு நேரான கோடுகள் வரும் வகையில் நடுவே சீராக அழுத்தவும். மூக்கின் மேல் பாகத்திலிருந்து மேல்நோக்கி செல்ல வேண்டும். மேலிருந்து கீழாக அல்ல. இறுதியில் இரண்டு அழகிய கோடுகள் வரும்வரை இதனை பலமுறை தொடரலாம். பின்னர், கோபிசந்தனத்தை மேலிருந்து கீழாக மூக்கின் மீது இட வேண்டும். மூக்கின் நான்கில் மூன்று பங்கு திலகம் இருக்க வேண்டும். (அதாவது, மிகச் சிறியதாகவும் இல்லாமல், மூக்கு முழுவதும் இல்லாமல் இருக்க வேண்டும்.) நெற்றியில் இடப்பட்டதையும் மூக்கில் தரித்ததையும் இடைவெளி ஏதுமின்றி இணைக்க வேண்டும், 



உடலின் குறிப்பிட்ட இடங்களில் திருநாமம் தரிக்கும்போது, பின்வரும் மந்திரங்களை இங்கு காட்டப்பட்டுள்ள வரிசையில் உச்சரித்து திலகமிட வேண்டும்.


1) ஓம் கேஷவாய நம:     -     நெற்றி


(2) ஓம் நாராயணாய நம:     -     வயிற்றின் மத்தியில்


(3) ஓம் மாதவாய நம:     -     நெஞ்சுப்பகுதி 


(4) ஓம் கோவிந்தாய நம:     -      கீழ் கண்டம் (தொண்டை) 


(5) ஓம் விஷ்ணவே நம:     -     வயிற்றின் வலப்பக்கம்


(6) ஓம் மதுஸூதனாய நம:     -     வலது புஜத்தின் கீழ்பகுதி


(7) ஓம் த்ரிவிக்ரமாய நம:     -     வலது புஜத்தின் மேல்பகுதி


(8) ஓம் வாமனாய நம:     -     வயிற்றின் இடப்பக்கம்


(9) ஓம் ஸ்ரீதராய நம:     -     இடது புஜத்தின் கீழ்பகுதி


(10) ஓம் ஹ்ருஷீகேஷாய நம:     -     இடது புஜத்தின் மேல்பகுதி


(11) ஓம் பத்மநாபாய நம:     -     முதுகின் மேல்பகுதி


(12) ஓம் தாமோதராய நம:     -     முதுகின் கீழ்பகுதி   



வலது கரத்தின் மோதிர விரலால் திருநாமம் இட வேண்டும். வலது புஜத்தில் இடப்படும் இரண்டு திலகத்திற்கும் இடது கரத்தின் மோதிர விரலைப் பயன்படுத்த வேண்டும். திலகம் இட்டுக் கொண்டபின், இடது உள்ளங்கையில் இருக்கும் சிறிதளவு கோபிசந்தனத்தை, ஓம் வாஸுதேவாய நம: என்று சொல்லியவாறு உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டும்

Comments